Yakobin Kal | யாக்கோபின் கல் | Stone Of Jacob | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு : Yakobin Kal | யாக்கோபின் கல் | Stone Of Jacob

Message Date / தேவ செய்தி நாள் : 11 February 2024 | 11 பிப்ரவரி 2024

Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் திரு. இராபர்ட் சைமன்

Yakobin Kal | யாக்கோபின் கல் | Stone Of Jacob | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

 

இரண்டு மூன்று நாட்களாக என் மனதை பாரப்படுத்திய ஒரு தலைப்பை குறித்து இன்றைக்கு பார்க்கலாம்.

யாக்கோபின் கல்

 

ஆதியாகமம் 28 :10  யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,

ஏசா, யாக்கோபை கொல்ல விரும்புகிறான். எனவே யாக்கோபை அவனது மாமன் லாபான் வீட்டுக்கு போகும்படி அவனது தாய், தந்தை அனுப்பி வைக்கிறார்கள். பெயர்செபாவுக்கும், பதநறாமுக்கும் இடையே உள்ளது தூரம் ஒன்பதாயிரம் கிலோமீட்டர் தூரமாகும். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஈசாக்கு தன் மகன் யாக்கோபை அங்கே அனுப்பி வைக்கிறான். அப்பொழுது யாக்கோபுக்கு வயது 70. அவன் செல்லும் பாதை வனாந்தரம் .வலுசர்பம் மற்றும் கோட்டான் குஞ்சுகள் உள்ள இடம் வேறு வழி இல்லை .ஆண்டவர் பார்த்துக் கொள்வார். விசுவாசத்தோடு அனுப்பி வைக்கிறார்கள். இல்லையெனில் அண்ணன், தம்பியை கொன்று விடுவான்.

ஆதியாகமம் 28 :11 ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.

                       அது ஒரு நேர் பாதை. அப்படி அவன் புறப்பட்டு போகையில் ஓரிடத்தில் வருகிறான் . மாலையிலே இருள் வர ஆரம்பிக்கிறது. அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். உள்ளேயும் (மனதிலும்) இருள் வெளியிலும் இருள் . அங்கே யாக்கோபு ஒரு சொப்பனம் காணுகிறார்.

ஆதியாகமம் 28 :12 அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.

ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது. அதின் நுனி வானத்தை எட்டி இருந்தது. பிரியமானவர்களே! வானமும், பூமியும் பிரிக்கப்பட்டு இருந்தது. நாம் பூமிக்குரியவர்கள். நாம் பரலோகம் போக முடியாது. தேவதூதர்கள் வானத்துக்குரியவர்கள். வானத்தையும் பூமியையும் தொடர்புப்படுத்தும்படி ஒரு ஏணி வைக்கப்பட்டிருக்கிறது . அதில் தேவதூதர்கள் ஏறுகிறதும் இறங்குகிறதுமாக இருக்கிறார்கள் .

இங்கே ஒரு செய்தி இருக்கிறது.

                                               அது என்ன செய்தி?

தேவதூதர்கள் பரலோகத்தில் உள்ள ஆசீர்வாதத்தை பூமிக்கு கொண்டு வருகிறார்கள். இங்குள்ள பரிசுத்தவான்களின் வேண்டுதலை, விண்ணப்பங்களை வானத்திற்கு கொண்டு செல்லுகிறார்கள். வானத்திலிருந்து பதிலை பூமிக்கு கொண்டு வருகிறார்கள்.

ஆதியாகமம் 28 :13 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

ஆதியாகமம் 28:14 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

அதற்கு (அந்த ஏணிக்கு) மேலாக யாவே, கர்த்தர் நின்று, நான் உன் தகப்பனாகிய யாக்கோபின் தேவனும், ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர் என்று சொல்லுகிறார்  . மேலும் நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளை போல் இருக்கும் என்று சொல்லுகிறார் .

                ஆதியாகமம் 28 :15 நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

                ஆதியாகமம் 28:16 யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.

                ஆதியாகமம் 28:17 அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.

இப்போது யாக்கோபு நித்திரை தெளிந்து எழுந்து பார்க்கிறான். உண்மையாகவே இந்த வனாந்தரத்தில் கூட ஆண்டவர் இருக்கிறார் என்று அறிந்து கொள்ளுகிறான். இதை நான் அறியாதிருந்தேன் என்று எண்ணுகிறான். இப்போது தேவபக்தியினாலே யாக்கோபு பயந்து, இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறு அல்ல என்று சொல்லி இது வானத்தின் வாசல் என்று சொல்லி படுத்து உறங்கினான்.

ஆதியாகமம் 28:18 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,

அதிகாலையிலே யாக்கோபு எழுந்து தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, அவன் தேவ பக்தியினாலே பயந்து இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது என்று எண்ணினான். அதற்கு எண்ணெய் வார்த்து அந்த ஸ்தலத்திற்கு பெத்தேல் என்று பெயரிட்டான். இதற்கு முன்னே அந்த இடத்திற்கு லூஸ் என்ற பெயர் இருந்தது. லூஸ் என்றால் பாதாம் மரம் என்று அர்த்தம். கர்த்தர் என்னை இந்த இடத்திற்கு திரும்பி வர பண்ணுவாரானால் யாவே என் தேவனாய் இருப்பார் என்று சொல்லுகிறான். நான் தூணாக  நிறுத்தின இந்த கல் தேவனுக்கு வீடு என்று சொன்னான். அந்தக் கல்லில் ஒரு பிளவு இருக்கிறது என்று கூறுகிறார்கள்!

முடி சூட்டும் கல் (CORONATION STONE)

இன்றைக்கும் ஸ்காட்லாந்தில் முடி சூட்டும் கல் என்று ஒன்று இருக்கிறது. பிரிட்டன் (அயர்லாந்து , ஸ்காட்லாந்து, இங்கிலாந்து )நாட்டு மன்னர்கள் முடி சூட்டும்போது இந்த கல்லின் மேல் அமர்ந்துதான் முடி சூட்டுவார்களாம். எனவே தான் இந்த கல்லுக்கு முடி சூட்டும் கல் (CORONATION STONE OR STONE OF DESTINY) என்று பெயர் வந்தது.

1296-ல் முதலாம் எட்வர்ட் காலத்தில் அவர் இந்த கல்லை அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு வந்தார். இங்கிலாந்து ராணி எலிசபெத் வரைக்கும் இந்த கல்லின் மீது ஒரு நாற்காலியில் அமர்ந்து தான் அவர்கள் முடி சூட்டு விழா நடைபெற்று அரசு பதவியை ஏற்றார்கள். எரேமியா தீர்க்கதரிசி தான் இந்த கல்லை அயர்லாந்துக்கு கொண்டு கொடுத்தார் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

சங்கீதம் 118:22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

ஒன்றுக்கும் உதவாதது என்று தூக்கி எறியப்பட்ட கல்லே வீடு கட்டுவதற்கு மூலைக் கல்லாயிற்று . யாக்கோபு பயன்படுத்தின இந்த கல்லைத்தான் சாலமோன் ராஜா தேவாலயம் கட்டும் போது மூலைக்கல்லாக வைக்க விரும்புகிறேன் என்று இந்த கல்லை வைத்து கட்டினார்கள். நேபுகாத் நேச்சர் காலத்தில் அந்த தேவாலயத்தை இடிக்கும் பொழுது அந்த கல்லை எடுத்துக் கொண்டுதான் எரேமியா ஓடினார்.

இந்தக் கல்லை பற்றிய ஒரு சில ஆவிக்குரிய காரியங்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

  1. யாக்கோபு தெரிந்து கொண்ட ஒரு கல்

ஆதியாகமம் 28 :  11 ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.

                  இந்தக் கல்லை யாக்கோபு ஏன் தெரிந்து கொண்டார்?

                    வேதத்தில் அதற்கு விடை கொடுக்கப்படவில்லை

                       ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கல்லை பற்றி ஏன் பேசப்படுகிறது? என்ன சிறப்பு அம்சம் அந்த கல்லில் காணப்படுகிறது?

தேவனுடைய தெரிந்து கொள்ளுதல்.

ஆபிரகாமை தேவன் தெரிந்து கொண்டார். ஆபிரகாமை பார்த்து, உனக்குள்ளாக சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவரிடத்தில் என்ன காணப்பட்டது? எதற்காக அவரை அழைத்துக் கொண்டு வந்தார்? பஞ்சம் ஏற்பட்ட போது எகிப்துக்கு தப்பி போனார். தனது மனைவியை சகோதரி என்று சொன்னார். எலியா தீர்க்கதரிசிக்கு உணவு கொடுக்க ஏன் ஒரு காக்காவை தேவன் தேர்ந்தெடுத்தார்.? ஒரு குயிலோ, மையிலோ, கழுதோ ஏன் கிடைக்கவில்லை?

இது  தேவனுடைய தெரிந்து கொள்ளுதல்.

நம்மிடத்தில் என்ன சிறப்பம்சம் காணப்படுகிறது? நம்மை ஏன் தேவன் தெரிந்து கொண்டார்? நம்மை ஏன் தேவன்  இந்த சபைக்கு அழைத்து வந்தார் ?

அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல்.

மரியாளை தேவன் தெரிந்து கொண்டார். உன்னை தேவன் அவருடைய காரியத்திற்காக தெரிந்து கொண்டிருக்கிறார் என்றால், அது அவருடைய கிருபை. மீன்பிடித்துக் கொண்டிருந்த பேதுருவை ஏன் அழைத்தார்? ஏன் பவுலை அவர் மாற்றினார்? ஏன், என்னை, உன்னை சந்தித்தார்? ஏன் நாம் இங்கே வந்தோம்?

                              அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல்

அன்று ஸ்காட்லாந்தில் இருந்த கல்லோ, அயர்லாந்தில் இருந்த கல்லோ இல்லையோ, இன்று கருமேலில் பேசப்படுகிறது யாக்கோபின் கல்.  அல்லேலூயா!!

  1. யாக்கோபு பயன்படுத்தின கல்

தன்னுடைய ஜீவன் தப்ப யாக்கோபு ஓடிக் கொண்டிருக்கிறான் . அவன் அந்த கல்லை தன்னுடைய இளைப்பாறுதலுக்காக பயன்படுத்தினான். அவன் அந்த கல்லை தெரிந்து கொண்டது மாத்திரமல்ல ,அவன் அந்த கல்லை பயன்படுத்தினான். ஏதோ ஒரு வகையில் தேவன் நம்மை தெரிந்து கொண்டு நம்மை பயன்படுத்துகிறார் நம்மை குறித்த அநாதி தீர்மானம் நமக்கு முழுமையாய் தெரியாது. தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே உன்னை தெரிந்து கொண்டேன் என்று சொல்லுகிறார். ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக இருக்கும்படி உன்னை தெரிந்து கொண்டேன் என்கிறார்.

  1. அந்தக் கல் தூணாக நிறுத்தப்படுகிறது

அந்தக் கல் லூஸ் என்ற இடத்தில் மற்ற கற்களோடு தரையோடு தரையாக கிடந்தது. யார் அந்த கல்லை எடுத்து வைத்தார் ? யாக்கோபு அதிகாலையில் எழுந்து அந்த கல்லை எடுத்து தூணாக நிறுத்துகிறார். இன்றைக்கும் நாம் அந்த கல்லை நினைப்பதற்கு காரணம் அந்த கல்லை யாக்கோபு அதிகாலையில் எடுத்து தூணாக நிறுத்தினார். இன்றைக்கு நாமும் நிறுத்தப்பட வேண்டும். இன்றைக்கு அந்த கல்லை போன்று நம்மில் அநேகர் தரையோடு தரையாக படுத்து கிடக்கிறோம். இன்னும் எழுந்து தூணாக நிறுத்தப்படவில்லை. உலகத்தோடு உலகமாக இருக்கிறோம். தேசத்தோடு, உலகத்தோடு, உலக வேஷமாக இருக்கிறோம் .

                           இன்றைக்கு நீங்கள் தரையோடு, கற்களோடு, கற்களாக படுத்து கிடக்கிறீர்களா? அல்லது தூணாக நிறுத்தப்பட்டு இருக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்.

சபைக்கு வரும்போது மாத்திரம் சிலர் நல்ல பிள்ளைகள் போல வேஷம் போட்டு வருவார்கள். நண்பர்களோடு செல்லும்போது வேறு மாதிரி வேஷம் போட்டு செல்வார்கள்.

                       அந்தக் கல் எப்படி தூணாக நிறுத்தப்பட்டிருக்கும்?

ஆழமாக பள்ளம் தோண்டி, தண்ணீர் ஊற்றி அதற்குள்ளாக அந்த கல்லை வைத்து, அந்தக் கல் வெளியே விழுந்து விடாதபடி அதை நிறுத்துகிறார் .இந்த சிலுவை கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கும். தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ள முடியவில்லை இவர் எப்படி நம்மை இரட்சிப்பார்? எண்ணிப் பார்க்கும்போது பைத்தியமாய் இருக்கிறது. சிலுவை பற்றிய உபதேசம் உலகத்தாருக்கு பைத்தியமாய் இருக்கிறது. பிரியமானவர்களே! பக்தி உள்ளவர்களுக்கு இடறுதலாய் இருக்கிறது. இவர் உண்மையாகவே நல்லவராக இருந்தால் தேவன் இவரை கைவிடுவாரா? இடறுகிறார்கள். ஆனால் இந்த சிலுவைதான் நமக்கு இரட்சிப்பாக இருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ இந்த சிலுவைதான் தேவ பலனாய் இருக்கிறது.

பிரியமானவர்களே! இன்றைக்கு அநேக சபைகள் பலவிதங்களில் செயல்படுகின்றன. நீ தூணாக மாற வேண்டும் என்றால் சிலுவையை சுமக்க வேண்டும் . சிலுவை என் முன்னே,  உலகம் என் பின்னே ! அந்தக் கல்லில் ஒரு பிளவு இருக்கிறது என்று கூறுகிறார்கள்! அந்தப் பிளவுண்ட கல்லின் மேல் தான் சிலுவை நிறுத்தப்பட வேண்டும். அந்த கல்வாரி அன்பில், நான் புதைக்கப்பட்டேனானால் மழை வந்தாலும் அசையாது! காற்றடித்தாலும் அசையாது!

வெள்ளங்கள் பெருகினாலும் என் நேசர் மீது உள்ள நேசத்தை அழிக்க முடியாது. எந்த வெள்ளங்களும் உள்ளே பற்றி எரிகிற அந்த அக்கினியை அழிக்காது. என்ன கஷ்டம் வந்தாலும் நான் தூணாக இருப்பேன். ஆண்டவர் என்னை பிரித்து எடுத்தார், பயன்படுத்தினார், என்று அல்ல ,என்னை துணாக நிறுத்தினார் .

  1. அபிஷேகம் பண்ணப்பட்ட கல்

அங்கே நிறைய கற்கள் விழுந்து கிடக்கின்றன . அந்த ஒரு பிளவுண்ட கல்லில்  யாக்கோபு எண்ணெய் ஊற்றுகிறான். தாவீதினுடைய சகோதரர்கள் நின்றார்கள். ஆனால் தாவீதின் மேல் மட்டும்தான் எண்ணெய் ஊற்றப்பட்டது. ஆரோனின் சிரசின் மேல் எண்ணெய் ஊற்றப்பட்டது. கர்த்தர் எனக்கு குறித்த தீர்மானம் என்னில் நிறைவேறும். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. நீ அபிஷேகம் பண்ணப்பட்ட கல். என் ஆவியில், ஆத்துமாவில், சரீரத்தில், அபிஷேகம் எனக்குள் இருந்து அந்த அபிஷேகம் ஓடும். எனக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் நான் அபிஷேகம் பண்ணப்பட்ட கல்.

ஆண்டவரிடத்தில் கேளுங்கள் என்னில் உம்முடைய தீர்மானம் நிறைவேற இன்று என் மீதும் எண்ணெய் ஊற்றும் என்று கேளுங்கள் ! உம்முடைய அபிஷேகத்தை ஊற்றும்!

  1. இந்த கல் தேவனுடைய வீடு

உம்முடைய இந்த கல் தேவனுடைய வீடேயல்லாமல் வேறு அல்ல! இந்த கல், தேவன் தங்குகிற வீடாக, தேவனுடைய வாசஸ்தலமாக மாற வேண்டும். சபையில் பயன்பட்டோம். அபிஷேகம் கிடைத்தது என்று மட்டுமல்ல, தேவன் தங்குகிற வாசஸ்தலமாக, தேவனுடைய வீடாக இருக்க வேண்டும். ஏல் பெத்தேலாக ,  அபிஷேகம் நம்மூலமாக கிரியை செய்ய ஆரம்பிக்கும் போது இந்த நதி செல்லும் இடம் எங்கும் செழிப்பு உண்டாகும். அந்த கல் தேவனுடைய வீடாக மாறியது! ஆண்டவரே அளவில்லாமல் உம்முடைய ஆவியை என் மீது ஊற்றி என்னை அபிஷேகியும். உம்முடைய கல்வாரி அன்பில் என்னை நிலைநாட்டும்! உம்முடைய கல்வாரி அன்பில் என்னை நிலை நிறுத்தும்!

சாதாரண ஒரு கல்லின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய் அந்த கல்லை தேவாலயமாக மாற்றுமானால் ஜீவனுள்ள உன் மீது வெற்றி பெற்ற தேவனுடைய அபிஷேகம் ஊற்றப்பட்டால் நீ என்னவாக மாறுவாய்?

ஜீவன் தப்ப ஓடிப்போன யாக்கோபு அல்ல. ஜீவன் கொடுக்க வந்த இயேசு வெறும் எண்ணெயை அல்ல , பரிசுத்த ஆவியை உன் மேல் ஊற்றும் போது நீ என்னவாக மாறுவாய்?. இப்பொழுதே அந்த அபிஷேகத்தை பெற்றுக்கொண்டு ஏல் பெத்தேலாக தேவனுடைய ஆலயமாக மாறிவிடு. தேவனுக்காய் அபிஷேகம் பண்ணப்பட்ட யாக்கோபின் கல்லாக , தூணாக கிறிஸ்துவுக்குள் உன்னை நிலை நிறுத்தி விடு.

யாக்கோபின் கல் – ஆவிக்குரிய ரகசியங்கள்

  • தேவன் தெரிந்து கொண்ட ஒரு கல்
  • தேவன் பயன்படுத்தின கல்
  • தூணாக நிறுத்தப்பட்ட கல்
  • அபிஷேகம் பண்ணப்பட்ட கல்
  • இந்த கல் தேவனுடைய வீடு
Share with