Arise And Shine! | எழும்பி பிரகாசி! | Yelunbi Pragasi! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு : Arise And Shine! | எழும்பி பிரகாசி! | Yelunbi Pragasi!

Message Date / தேவ செய்தி நாள் : 01 January 2023 | 01 ஜனவரி 2023

Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Arise And Shine! | எழும்பி பிரகாசி! | Yelunbi Pragasi! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

 

 ஏசாயா 60: 1 முதல் கடைசி வசனம் முடிய.

ஏசாயா 60:1  – எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

                       கடந்த நாட்களில் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி .புதிய வருடத்தில் பிரவேசிக்கும் இன்றைக்கு ஒரு வார்த்தையோடு கூட கர்த்தர் உங்களை சந்திக்கிறார். எழும்பிப் பிரகாசி! உன் ஒளி வந்தது! கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும். மாம்சமான யாவரும் கர்த்தருடைய மகிமையை வெளியரங்கமாக உன்னிலே காண்பார்கள் .

ஏசாயா 60: 2 – இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

இந்த 2023-ம் ஆண்டு எப்படி இருக்குமோ? சட்டங்கள் மாறுகிறது, கொரோனாவைப் பற்றி பேசுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. பிள்ளைகளுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை? அப்படிப்பட்ட காலத்திற்குள்ளாக நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! இதோ பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

ஏசாயா 60: 3 – உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.

உங்களுக்குள்ளே இருக்கும் ஒரு வெளிச்சத்தை கண்டு மற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சத்தியத்தை அறியாதவர்கள், இருளிலே உள்ளவர்கள்,  உங்களிடத்தில் வருவார்கள்.

எனது சாட்சி

                    நான் ஒரு பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்கு  24  வயது இருக்கும்.  பள்ளிக்கூடத்தில் ஒரு பிரச்சனை. எல்லாரும் Disturbed ஆக இருந்தார்கள். நான் கர்த்தருக்குள் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய முதல்வருக்கு 70 வயது இருக்கும். எனக்கு 24 வயது இருக்கும். அப்பொழுது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியை பார்த்து, என்னுடைய முதல்வர் கேட்டார்.

                    Robert how is that you are able to be so cool?

எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார். ஒரு வெளிச்சம் இருக்கிறது . ஆண்டவர் கைவிடமாட்டார். காரிருளில் என்னுடைய நேச தீபம் என்னை நடத்தும் .

காரிருளில் என் நேச தீபமே! நடத்துமேன்!

                       வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்!

                       நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்

                       ஓர் அடி மட்டும் என்முன்  காட்டுமேன்!

எவ்வளவுதான் இந்த உலகத்தில் இருள் இருந்தாலும் சரி. என்ன  செய்யலாம் என்று கேட்பதற்காக உங்களிடத்தில் ராஜாக்கள் ஓடி வருவார்கள், உங்களுடைய முதல்வர் வருவார் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மந்திரிகள் வருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களிடத்தில் வருவார்கள் ஏனெனில், ஒரு வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கும்.

ஏசாயா 60:  4 – சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.

ஏசாயா 60:  5 – அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.

ஏசாயா 60:  6 – ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.

ஏசாயா 60:  7 – கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.

                     உன் கண்களை ஏறெடுத்துப்பார்! புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்கும் முன்பதாக உன் கண்களை ஏறெடுத்துப் பார்! உங்களுக்கு கர்த்தர் ஒரு மகிமையான ஊழியத்தை வைத்திருக்கிறார்! இந்த ஆண்டு கர்மேல் திருச்சபைக்கு அருமையான ஊழியத்தை கர்த்தர் வைத்திருக்கிறார்! ஏராளமான ஜாதிகள் உன்னிடத்தில் வருவார்கள். நீ அதைக் கண்டு கர்த்தரிடத்தில் ஓடி வருவாய்! உன்னுடைய இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும்! ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்தில் வருவார்கள் ! எழுத்தின்படியே நடக்கப்போகிறது. அவர்கள் உங்களது ஊழியத்தின் தேவைகளை சந்திப்பார்கள். நம்மிடத்தில் வருபவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள்.

ஏசாயா 60:  8 மேகத்தைப்போலவும் தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?

              புறாக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் இடத்திற்கு பறந்து போவது போல, கூட்டம் கூட்டமாக உன்னிடத்திற்கு வருவார்கள். கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும்போது உன்னுடைய பழைய வாழ்க்கை மாறும் .

ஏசாயா 60:  9 தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும் அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும் தூரத்திலிருந்து கொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.

தீவுகள் உங்களுக்காக காத்திருக்கும் என்று சொன்னால், சிறுமை பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் உங்களுக்காக காத்திருப்பார்கள் என்று பொருள்.   அநேக ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வார்த்தை எனக்கு வந்தது. தீவுகள் எனக்காக காத்திருக்குமா? அந்த வார்த்தை கிடைத்து சில நாட்களுக்குள்ளாக,  புரூனே தேசத்திலிருந்து எனக்கு ஊழியத்திற்கு அழைப்பு வந்தது. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தீவு என்றால் நான்கு புறமும் தண்ணீரினால் சூழப்பட்ட இடம். உபத்திரவத்தில், கஷ்டத்தில், பிரச்சினைகளினால் சூழப்பட்டு இருப்பார்கள். அவர்கள் உங்களுக்காக காத்திருப்பார்கள். உங்களுடைய ஊழியத்திற்காக காத்திருப்பார்கள் . எழுத்தின் படியே அநேக இடங்களில் நீங்கள் சத்தியத்தை சொல்லுவதற்காக கர்த்தர் உங்களை கொண்டு போவார். தீவுகள் உங்களுக்காக காத்திருக்கும்.

ஏசாயா 60:  10 அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.

கடந்த நாட்களில் நாம் பிரமாணங்களை மீறினோம்.  கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களைச் செய்தோம். குறைகள் பல இருந்தது. கர்த்தருக்கு நம் மேல் கோபம் வந்தது. அந்த கோபத்தினால் அவர் அடித்தார். நெருக்கங்கள், கஷ்டங்கள், வேதனைகள், சோதனைகள், இழப்புகள் வந்தது . பிரியமானவர்களே! இந்த இராத்திரி வேளையில் கர்த்தர் சொல்லுகிறார்! நான் அடித்தது உண்மைதான். ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்குவேன்! கடந்தது கடந்த காலமாக செல்லட்டும்.

ஏசாயா 60:  11 உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும் உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.

இரவும் பகலும் ஜெபிப்பதற்காக உன்னிடத்தில் வருவார்கள். உன்னுடைய வீடு பூட்டப்படாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஊழியத்தை கர்த்தர் உனக்கு தருவார்.

எனது ஊழியத்தில் ஒருமுறை 48 மணி நேரம் தூங்காமல் ஊழியம் செய்தேன். அன்று இரவு, தூங்க சென்ற போது, தொடர்ந்து தொலைபேசி அடித்துக்கொண்டே இருக்க, அதை எடுத்து பேசியபோது ஒரு சகோதரி மருத்துவமனையில் இருப்பதாகவும்,  உடனடியாக வந்து அவர்களுக்ககாக ஜெபிக்கவும் கேட்டுக் கொண்டார்கள். அப்படியாக இரவு மருத்துவமனைக்கு நான் சென்று ஜெபித்த பிறகு ,அந்த சகோதரிக்கு நல்ல சுகம் கிடைத்தது. நான் சென்ற காரிலேயே அவர்களை திரும்ப வீட்டிற்கு அழைத்து வந்து விட்டபோது கிட்டத்தட்ட அதிகாலை நான்கு மணி ஆனது. ஆண்டவரிடத்தில், ஆண்டவரே! இதுதானா ஊழியம் என்று கேட்டுக்கொண்டேன். அந்த சகோதரியும், இந்தக் கூட்டத்திலே இப்போது உள்ளார். இப்படியாக ஊழியர்களின் வீடுகள் இரவும் பகலும் பூட்டப்படாமல் இருக்கும்.

ஏசாயா 60:  12 உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்.

ஏசாயா 60:  13 என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்.

                    உங்களது வாழ்க்கையை கர்த்தர் மகிமையுள்ள, சிங்காரமான வாழ்க்கையாக மிகவும் அழகான வாழ்க்கையாக மாற்றுவார். அவர் வரங்களைத் தருவார். அவர் கர்த்தருடைய மகிமை மட்டும் நம் மேல் காணப்படுமானால் உங்களது தேவைகளையெல்லாம் கர்த்தர்  சந்திப்பார். கர்த்தர்

ஏசாயா 60:  14 உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.

               புறஜாதிகள் மாத்திரமல்ல, ராஜாக்கள் மாத்திரமல்ல, உங்களை ஒடுக்கினவர்கள், அசட்டை பண்ணினவர்கள் உங்களிடத்தில் வருவார்கள். உங்கள் குடும்பத்தில், உங்கள் வேலை ஸ்தலத்தில், நீ தேவனுடைய பரிசுத்த பிள்ளை என்று சொல்லுவார்கள்.

ஏசாயா 60:  15 நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.

கடந்த நாட்களில் நீ கைவிடப்பட்டவள் என்று உன்னை எண்ணினார்கள். ஆனால் நீ அப்படி இருக்க மாட்டாய் கர்த்தருடைய மகிமை உன்னிலே காணப்படும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 60:  16 நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்.

ஏசாயா 60:  17 நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும், வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.

இன்றைக்கு இருக்கிற நிலைமாறி வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும், வரப்பண்ணி எல்லாவற்றிலும் ஒரு வளத்தை கர்த்தர் கட்டளையிடுவார். நீ நினைப்பதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் அதிகமாக கர்த்தர் செய்வார்.

ஏசாயா 60:  18 இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.

இதுவரைக்கும் இருந்த தண்ணீர், கஷ்டம், வேதனைகள், கொடுமை, சண்டை, சச்சரவு, அநியாயம் உன்னுடைய எல்லையில் கேட்கப்படாது. கர்த்தருடைய துதி எப்போதும் என் வாசலில் இருக்கும். எழும்பிப் பிரகாசி!

ஏசாயா 60:  19 இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

ஏசாயா 60:  20 உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

இந்த உலகத்தில் இருக்கிற சூரியனில் இருந்து வருகிற வெளிச்சம், சந்திரனில் இருந்து வரும் வெளிச்சம், நட்சத்திரங்களில் இருந்து வரும் வெளிச்சம், இவை எல்லாம் உனக்கு ஆசீர்வாதமாக இல்லாமல் தேவனே உனக்கு ஆசீர்வாதமாக இருப்பார். மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதுபோல அங்கே குத்துவிளக்கும் இருக்காது வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லுவது போல கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார் ! உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

ஏசாயா 60:  1 எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

ஏசாயா 60:  2 இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

                   எழும்பி பிரகாசி! நீ பிரகாசிக்க வேண்டிய நேரம் வந்தது. எதிலிருந்தெல்லாம் எழும்ப வேண்டும் என்று கர்த்தர் கூறினதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நியாயாதிபதிகள் 5 :12 விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ.

எல்லாரும் நன்றாக கண்களை திறந்து விழித்துப் பாருங்கள். விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ. எதிலிருந்து எழும்ப வேண்டும்? இதற்கு வரலாறு தெரிய வேண்டும். இஸ்ரவேல் புத்திரர் திரும்ப கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள். ஆதலால் கர்த்தர் அவர்களை தண்டித்தார்.

நியாயாதிபதிகள் 4 :1 – ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.

நியாயாதிபதிகள் 4 : 2 – ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்;

அவர் அவர்களை விற்றுப்போட்டார்.  ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் நான் உனக்கு இரங்கினேன் அந்த சேனாதிபதியினுடைய பெயர் சிசெரா. அவனிடத்தில் 900 இருப்பு  இரதங்கள் இருந்தது. தெபொராள்  ஒரு தீர்க்கதரிசி.

தெபோராள், பாராக்கை  நோக்கி எழும்பு! எழும்பு! என்றாள்.  அதற்கு பாராக்,  நீ என் கூட வருவதென்றால், நான் எழும்புவேன் என்று, இருவருமாக வீரர்களோடு யுத்தத்திற்கு செல்கிறார்கள். கர்த்தர் ஆச்சரியமாய் கிரியை செய்தார்.

சிசரா அங்கு செத்துக்கிடந்தான். யாரைக் குறித்து பயந்தார்களோ, அவருடைய கையை கர்த்தர் தாழ்த்தினார்! எதை குறித்து பயப்பட்டார்களோ, அந்த சூழ்நிலையை தேவன் மாற்றினார்!

அநேக வேளைகளில் கோலியாத்தை கண்டு, நமக்கு விரோதமாய் வருகிற ஆசீரியரை கண்டு, பெலிஸ்தியரை கண்டு சவுலைக் கண்டு  பாபிலோனியரை கண்டு பயப்படுவோம். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்.

நீ என்ன காரியத்தை குறித்து பயப்படுகிறாயோ,  எதைக் குறித்து தயங்குகிறாயோ அதை உதறிவிட்டு எழும்பு! கர்த்தர் உன்மேல் பிரகாசிப்பார்! கர்த்தர் உனக்கு ஜெயத்தை தருவார்!

                      என்னென்ன காரியங்களில் மகிமையாய் காணப்படுவார்கள்:

  1. ஒரு அச்ச உணர்வை விட்டு வெளியே வா!

முதலாவது நீங்கள் இந்த அச்ச உணர்வை விட்டு எழும்ப வேண்டும். பயப்படாதே எழும்பிப் பிரகாசி !  அச்ச உணர்வு , பயம்,  இவைகளில் இருந்து எழும்பி பிரகாசி! கர்த்தர் உனக்காக யுத்தம் பண்ணுவார். உன்னை சிறையாக்கினவர்களை சிறையாக்கிக்கொள்! அச்ச உணர்வு நம்மில் காணப்படும் போது நம்மால் காரியங்களை சரியாக செய்ய முடியாது. என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும்  செய்ய எனக்கு பெலன் உண்டு ! என்கூட என் தேவன் வருவார்!

                                     எதிலிருந்து நாம் வெளியே வர வேண்டும்?

                            அச்ச உணர்விலிருந்து நாம் வெளியே வர வேண்டும் .

கர்த்தர் உங்கள் மேல் பிரகாசிக்க வேண்டுமென்றால் உங்களுடைய அச்ச உணர்வைவிட்டு வெளியேறி எழும்பிப் வாருங்கள்.

  1. உறைந்து போன நிலையிலிருந்து வெளியே வா !

உன்னதப்பாட்டு 2:10 – என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா!

            உன்னதப்பாட்டு 2:11 – இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.

            உன்னதப்பாட்டு 2:12 – பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது.

என் பிரியமே ! என் ரூபவதியே! எழுந்து வா! இது கடுமையான குளிர் காலம். பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது. குருவிகள் பாடுங்காலம் வந்தது,  காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது.

                  உன்னதப்பாட்டு 2: 13 – அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா.

                   நீ எழுந்துவா! கடந்த காலத்தில் அநேக காரியங்கள் உங்களை செயலற்றுப் போக பண்ணியிருக்கும். முடங்கிக்கிடக்க பண்ணியிருக்கும். வெளியே தலைகாட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். எல்லாம் உறைந்து போய்விட்டது, இனி அவ்வளவுதான், என் வாழ்க்கை எல்லாம் முடிந்தது என நினைத்தோம். இப்பொழுது புஷ்பங்கள் பூக்க ஆரம்பித்தது.

கர்த்தருக்கு மகிமையாக நீங்கள்  காணப்பட வேண்டும். கர்த்தருக்கு மகிமையாக இந்த ஆண்டு எழும்பி பிரவேசிக்க வேண்டும் என்றால், கடந்த ஆண்டில் என்னென்ன காரியங்களில் நீங்கள் உறைந்து போய் இருந்தீர்களோ அவைகளை விட்டு வெளியே எழும்பி வாருங்கள்.

ஒரு காலகட்டத்தில் ஆபிரகாம் சொல்லுகிறார். ஆண்டவரே! எனக்கு வயதாகிவிட்டது. என் சரீரம் செத்துவிட்டது. ஏற்கனவே என் மனைவி மலடியாய் இருக்கிறாள். மலடி ஸ்திரீகளுக்கான வழிபாடு நின்று போயிற்று. கர்ப்பம் செத்துப் போயிற்று. இனி இந்த இஸ்மாயில் உமக்கு முன்பாக பிழைப்பான்                   புதிய பாதையை திறக்க கர்த்தர் வல்லவராயிருக்கிறார். மாரிக்காலம் சென்று போயிற்று. வசந்தகாலம் வந்தது, எழும்பி பிரகாசி !

  1. உன்னுடைய பின் மாற்றத்திலிருந்து எழும்பி வெளியே வா!

லூக்கா 15: 18 – நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

லூக்கா 15: 19 – இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

கர்த்தருக்காக வைராக்கியமாக ஊழியம் செய்து கொண்டிருப்பீர்கள். ஏதோ ஒரு காலகட்டத்தில் அந்த தகப்பனை விட்டு விலகி ,ஆதி அன்பை விட்டு விலகிப் போனீர்கள். நல்ல தகப்பனின் ஆடுகளை மேய்க்க வேண்டிய நீங்கள், பன்றிகளை மேய்க்கிறீர்கள் பன்றிக்கு வைக்கும் தவிடு கூட சாப்பிட கிடைக்கவில்லை.

எழும்பு! உன்னுடைய பின் மாற்றத்திலிருந்து எழும்பு!

                  என்ன நிலையிலிருந்து விழுந்தாய்? என்று யோசித்துப் பார் ஐந்து காரியங்கள் உண்டு.  ஆதியில் உள்ள அன்பு, ஆதியில் உள்ள நம்பிக் கை, ஆதியில் செய்த கிரியை, ஆதி விசுவாசம், ஆதி மேன்மை ஆகிய ஐந்து காரியங்களை வேதத்தில் பார்ப்போம்.  உன்னுடைய பின் மாற்றத்திலிருந்து எழும்பு!

                  நீ என்ன நிலையில் இருந்து விழுந்தாய்? பரம பிதா உங்களை கரங்களில் எடுத்து பயன்படுத்துவார்.

  1. தூசியை உதறிவிட்டு எழும்பு !

ஏசாயா 52: 1 – எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

ஏசாயா 52: 2 – தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

                          எழும்பு! எழும்பு! சீயோனே! உன் அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள்!. யுத்தத்திற்கான உன்னுடைய உடைதான் உனக்கு அலங்காரம். இன்றைக்கு சீயோன் எழும்ப முடியாமல் இருப்பது இந்த தூசியினால்தான்.  பயப்படாதே! பெரிய பாரங்கல் உங்களை அழுத்தவில்லை. அதை உதறி விட்டு வெளியே சின்ன சின்ன தூசி, சின்ன சின்ன பாவம் உங்களை எழும்பி பிரகாசிக்கவிடாமல் தடுக்கிறது. எழும்பி வா! இந்த தூசி உன் ஆசீர்வாதத்தை எடுத்து விடக்கூடாது! இந்த புதிய ஆண்டிற்குள் நுழைவதற்கு முன் சின்ன சின்ன தூசியை விட்டு, சின்ன சின்ன பாவங்களை விட்டு வெளியே வாருங்கள் . காலையில் செல்போன் பார்க்கிறாயா? அதை உதறிவிட்டு வெளியே வா! கர்த்தருடைய சித்தம் என்னவென்று பகுத்தறியத்தக்கதாய் நீங்கள் தூசியை உதறி விட்டு வெளியே எழும்பி வாருங்கள்! பவுல் சொல்லுகிறார், கர்த்தருக்கு பிரியமானதை செய்ய, லாபமானதை, நஷ்டமும், குப்பையுமாய் எண்ணுகிறேன்.  கர்த்தருக்காக எல்லாவற்றையும் விட ஆயத்தமாய் இருக்க வேண்டும்.

சகோதரி சாராள் நவரோஜி அவர்களது சபையில் ஒரு சகோதரன் கிருதா வைத்திருந்தான். ஞானஸ்தானத்தின்போது கிருதாவை எடுக்க சொன்னார்களாம். அதற்கு அந்த சகோதரன் செத்தாலும் அதை எடுக்க மாட்டேன் என்று சொன்னானாம். அவன் உயிரையே, மயிரில் வைத்திருக்கிறான் என்று சகோதரி சொன்னார்களாம்.

  1. தூங்குகிற நீ விழித்து மரித்தோரை விட்டு எழுந்து வெளியே வா!

       எபேசியர் 5:  14 ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

தூங்குகிற நீ மரித்தோரை விட்டு எழும்பும்போது, கர்த்தர் உன்னை பிரகாசிக்கப்பண்ணுவார்!

நீங்கள் அன்பிலே நடந்து கொள்ளுங்கள். வீண் வார்த்தைகளினால் ஒருவரும் உன்னை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. பாவத்திலும், மரித்தவரிடத்திலும் சேராதே.  உலகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.  நீங்கள் அவர்களைப்போல இருக்காதீர்கள். இந்த ஆண்டு கர்த்தர் உங்களை எழும்பி பிரகாசிக்கப்பண்ணுவார்!. உங்களை ஒடுக்கி வைத்தவர்கள் உங்களிடத்திற்கு வருவார்கள். உதிக்கிற உங்கள் ஒளியினி டத்திற்கு ராஜாக்களும் வருவார்கள். நாம் பாலசிங்கம் போல எழும்ப வேண்டும்! நாம் தேவனுக்கென்று தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

எபேசியர் 5: 16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

                          1 தெசலோனிக்கேயர் 5 : 6 ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.

                            எண்ணாகமம் 23 : 21 அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜெயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

                            எழும்பு சீயோனே! உன் வல்லமையை தரித்துக் கொள்! 

பகலுக்குரியவர்களாய் தெளிந்தவர்களாக நாம், இருக்க வேண்டும். பாவத்திலும், மரித்தவரிடத்திலும் உள்ளது போல் இராமல், நாம், மகிமை உள்ளளாகிவர்களாக காணப்பட,

  • ஒரு அச்ச உணர்விலிருந்து எழும்பி வெளியே வா!
  • உறைந்து போன நிலையிலிருந்து எழும்பி வெளியே வா!
  • பின் மாற்றத்திலிருந்து எழும்பி வெளியே வா!
  • தூசியை உதறி விட்டு எழும்பி வெளியே வா!
  • தூங்குகிற நீ விழித்து மரித்தோரை விட்டு எழுந்து வெளியே வா!

 

Share with